உள்ளடக்கம்

141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) அகத்துறைகள் (26) அகநானூறு (4) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (3) இணையதள தொழில்நுட்பம் (17) உளவியல் (2) கருத்தரங்க அறிவிப்பு (7) கலித்தொகை (5) கலை (1) கவிதை (3) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (4) குறுந்தொகை (22) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (15) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (11) சங்கத்தமிழர் அறிவியல் (3) சங்கப் புலவர்களின் 473 பெயர்கள் (1) சிந்தனைகள் (7) சிறுபாணாற்றுப்படை (1) தமிழாய்வுக் கட்டுரைகள் (12) தமிழின் சிறப்பு (1) தமிழ் அறிஞர்கள் (1) தமிழ்த்துறை (1) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (20) தொல்காப்பியம் (1) தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை முழுவதும்.. (1) தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை.. (1) தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை..... (1) நட்சத்திர இடுகை (2) நற்றிணை (10) நெடுநல்வாடை (1) நோக்கு ( நூறாவது இடுகை ) (1) பட்டமளிப்பு விழா............... (1) பாராட்டுவிழா (1) புறநானூறு (13) பெண்களும் மலரணிதலும் (2) மனதில் நின்ற நினைவுகள் (9) மலைபடுகடாம் (1)

17 November, 2009

இரும்பிடர்த்தலையார்




தொடரால் பெயர் பெற்ற புலவர்களின் வரிசையில், “இரும்பிடர்த்தலையார்“ என்னும் புலவரின் பெயருக்கான காரணத்தையும், “செவியறிவுறூஉ“ என்னும் புறத்துறையையும் விளக்குவதாக இவ்விடுகை அமைகிறது.

பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும் பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார் பாடிய புறநானூற்றுப்பாடலில் எடுத்தாளப் பெற்ற “இரும்பிடர் தலையிருந்து“ என்னும் தொடரால் “ இப்புலவர் இரும்பிடர்த்தலையார் என்னும் பெயர் பெற்றார்.

நிலம் பிறழ்ந்து பெயர நேர்ந்தாலும் உன் ஆணையாகிய சொல்லில் மாறாதே என்று மன்னனுக்குப் புலவர் அறிவுறுத்தியதால் இப்பாடலின் துறை “செவியறிவுறூஉ“ ஆயிற்று.


பாடல் இதோ,


உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
ஏம முரசம் இழுமென முழங்க,
நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்,
தவிரா ஈகைக், கவுரியர் மருக!
செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந் திறல் கமழ்கடா அத்து
எயிரு படையாக, எயிற்கதவு இடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில்.
பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
பொலங் கழற்காற்,புலர் சாந்தின்
விலங் ககன்ற வியன் மார்ப!
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற்,
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை,
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்! அது
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே.


3.வன்மையும் வண்மையும்!
பாடியவர்: இரும்பிடர்த் தலையார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.
திணை: பாடாண்.
துறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
சிறப்பு : இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி.

பாடலின் பொருள்.

முழு மதியின் வடிவத்தைப் போல விளங்குகின்ற உயர்ந்த வெண்கொற்றக் குடை!
அது நிலைத்த கடற்பரப்பை எல்லையாக உடைய நிலத்தை, நிழல் செய்யவும் காவலாக அமைத்த முரசு, இழும் என்னும் ஓசையுடன் முழங்கவும் ஆணைச் சக்கரத்தைச் செலுத்தியவர் பாண்டியர்!
அருளுடைய நெஞ்சமும் குறையாத ஈகையும் கொண்டவர். அத்தகைய பாண்டிய மரபிலே வந்தவனே!
குற்றமற்ற கற்பினையுடைய சேயிழையின் (மனைவி, பெண்) கணவனே!

பொன்னாலாகிய பட்டத்தையும் புள்ளியையுடைய நெற்றியையும் நெருங்க முடியாத வலிமையையும் மணம் வீசும் மதநீரையும், கயிற்றால் கட்டிய கவிழ்ந்த மணிகள் பொருந்திய பக்கங்களையும் பெரிய துதிக்கையையும் கொண்டது உனது யானை!
அது தன் தந்தங்களையே போர்க்கருவியாகக் கொண்டு பகைவர் மதிலின் கதவுகளைக் குத்தும்!
அத்தகைய யானையின் கழுத்தின் மேல் அமர்ந்து கூற்றுவனைப் போல, பகைவர் மீள வழியின்றி வீழ்த்தும், ஒளி வீசும் வாளைக் கையில் கொண்டவனே!

பொன்னாலாகிய வீரக்கழல் அணிந்த காலும், பூசப்பட்டு உலர்ந்த சந்தனத்துடன் குறுக்கே அகன்ற மார்பையும் கொண்டவனே!
நீரில்லாத அரிய நில வழிகளில் மறவர்களின் அம்புக்கு இலக்காகி இறந்தவர்களின் அடையாளமாக அங்கு கற்குவியல்கள் காணப்படும். அதன் மீது திருந்திய சிறகினையும், வளைந்த வாயினையும் உடைய பருந்து அமர்ந்து வருந்தும்.
உன்ன மரங்கள் வளர்ந்து பிரிந்து செல்லும் வழிகள் விளங்கும்.

இத்தகைய வழிகளைக் கடந்து உன்னிடம் பொருள் பெறும் எண்ணத்துடன் இரவலர் வருவார்கள். அவர்களின் மனக்குறிப்பை முகக்குறிப்பாலேயே உணரும் திறன்கொண்டவன் நீ என்பதால் உன்னை இரந்து வேண்டுவர்.

அதனால் நிலமே பெயர்வதாயினும் உன் ஆனையாகிய சொல் மாறக்கூடாது. என்று மன்னனிடம் இந்தப் புலவர் அறிவுறுத்துகிறார்.

இப்பாடலின் வழி அறியாலுகும் உண்மைகள்


1. இப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியாத நிலையில் இப்பாடலில் இடம்பெறும், “இரும்பிடர்த் தலையிருந்து“ என்னும் தொடரால் இப்புலவர் இரும்பிடர்த்தலையார் என்னும் பெயர் பெற்றார் என்னும் கருத்து புலப்படுகிறது.

2.எமனிடமிருந்து உயிர்கள் பிழைப்பது அரிது என மக்கள் எண்ணுவர். அது போல பாண்டியனிடமிருந்து பகைவர் பிழைத்தல் அரிது. என்ற கருத்தின் வழியாக பாண்டியனின் வீரம் உணர்த்தப்படுகிறது.

3.யானையின் வீரத்தையும், அதன் மீது அமர்ந்து போர்செய்யும் பாண்டியனின் வலிமையையும் கூறுவதால், பாண்டியனின் படைச்சிறப்பும், அதை வழிநடத்தும் ஆற்றலும் சுட்டப்படுகிறது.

4.நீரில்லாத பாலை வழியே வரும் மக்களை அம்பெய்து கொல்லும் ஆறலைக்கள்வர்கள் இறந்த உடல்களின் மீது கற்களைக் குவியல்களாகப் போடுவர். வழிச்செல்வோர் “வம்பலர்“ என்றழைக்கப்படுவர். அவர்கள் மீது இடப்பட்ட கற்க்குவியல் ஆதலால் அதை “வம்பப் பதுக்கை“ என்று அழைத்தமையும் அறியமுடிகிறது.

5.“முன்னம் முகத்தின் உணர்ந்து“ என்னும் தொடர் வழியாக,உன்னம் என்ற மரம் தழைத்தலும், கரிந்து நிற்றலும் சகுனங்களாகும் என்ற சங்க கால நம்பிக்கையைத் தெரிந்துகொள்ளலாம்.

6.பாலை நிலத்தின் கொடுமையும், ஆறலைக்கள்வர்களின் கொடுமையும், அந்நில வழியே பல துன்பங்களைக் கடந்து பாண்டியனை நம்பி வரும் இரவலர்களின் வறுமையும் குறிப்பிடும் புலவர், இரவலர்களின் மனக்குறிப்பை அவர்களின் முகக்குறிப்பாலேயே புரிந்து கொண்டு கொடையளிக்கும் தன்மையுடையவன் பாண்டியன் என்று கூறுவதால் பாண்டியனின் கொடைத்திறனும் சுட்டப்பட்டது.

7.நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்..
என்று பாண்டியனின் செவிகளில் புலவர் அறிவுறுத்துகிறார். இதன் வழி இரவலர் உன் மீது கொண்ட நம்பிக்கையும்,உன் செங்கோலும் வழுவாது ஆடசி செய்தல் வேண்டும் என்ற அறிவுத்தல் புலனாகிறது....

மேலும் நிலம் பெயரும் (நிலநடுக்கம் ஏற்படும்) என்ற சங்க கால மக்களின் எண்ணத்தையும்,
அவ்வாறு நிலம் பெயர்ந்தாலும் தம் கொள்கைகளை மாற்றிக்கொள்ளக்கூடாது என்ற சங்ககாலமக்களின் ஆழ்ந்த கொள்கையையும் எண்ணிப்பெருமிதம் கொள்வதாக இப்பாடல் அமைகிறது.

Read more...

16 November, 2009

செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்




எமன் என்னும் கற்பனை மக்களிடம் நீண்ட நெடிய காலமாகவே இருந்து வருகிறது. எமன் என்பவன் மக்களின் உயிரை வாங்கும் தெய்வம். எருமை வாகனத்தில் வருவான். இவனுக்கு காலன், கூற்றுவன் என வேறு பெயர்களும் உண்டு. சங்க இலக்கியத்தில் எமனைப் பற்றி பல பாடல்கள் பலவிதமாகப் பாடப்பட்டுள்ளன. புறநானூற்றில் எமனின் இரங்கத்தக்க நிலையை நப்பசைலையார் சுவைபடக் கூறியுள்ளார்.

பாடல் இதோ,

செற்றன்று அயினும் செயிர்த்தன்று ஆயினும்
உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி
இரந்தன்றாகல் வேண்டும் - பொலந்தார்
மண்டு அமர் கடக்கும் தானைத்
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே“.

புறநானூறு.226
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கி்ள்ளி வளவனை மாறோகத்து நப்பசலையார் பாடியது


கூற்று என்னும் கால இறுதி பயக்கும் தெய்வம், எல்லா உயிர்களின் உயிரையும் எளிதில் எடுத்துவிடலாம்.
ஆனால் கிள்ளிவளவனின் உயிரைமட்டும் எளிதில் எடுத்துவிடமுடியாது.
கிள்ளி வளவன் மீது பகை கொண்டாலும்
சினம் கொண்டாலும்
அவனிடமிருந்து பிழைத்தல் அரிது.
பாடுநர் போல வந்து தொழுது அவனிடம் கொடைப் பொருளாக வேண்டுமானல் அவன் உயிரைப் பெறலாம். அதனால் பொன்னால் செய்த மாலையையும், போரில் எதிர் நின்று வெல்லும் படையினையும், நல்ல தேரையும் கொண்ட சோழனின் உயிரை வவ்வ வேறு வழியே இல்லை.


இப்பாடலில் கூற்றுவன் என்னும் எமன் சோழனின் உயிரை செற்றோ ( பகை கொண்டோ) செயிற்றோ ( சினம் - கோபம் - வெகுளி கொண்டோ) பெற முடியாது மாறாக., பாடுநர் போல வணங்கி உன் உயிரைத் தா என்று கேட்டால், கொடை என்று மனமகிழ்ச்சியோடு ஈந்துவிடுவான் என்கிறார் புலவர்.

இப்பாடலில் கிள்ளிவளவனின் வீரமும், கொடைத்திறமும் சிறப்பித்துப் பேசப்படுகிறது.

எமனே நெருங்க அஞ்சும் வீரமுடையவன் சோழன் என்றும்,
பாடுநர் போல வணங்கிக் கேட்டால் தன் உயிரைக் கூடத் தந்து விடுவான் என்பதால் அவன் கொடைத்திறமும் உணர்த்தப்பட்டது.

எமன் என்னும் கடவுள் குறித்த நம்பிக்கை சங்ககாலத்திலிருந்து இன்று வரை இருக்கிறது.

நம்பிக்கை மட்டுமே இருக்கிறது


இப்பாடலில் வளவனின் வீரத்தையும், கொடையையும் உயர்த்திச் சொல்ல வேண்டும் என்பதே புலவரின் நோக்கம். அதற்கு மக்கள் அஞ்சும் உயர் குறியீடாகவுள்ள கூற்றுவனை எடுத்துக்கொணடார்.

Read more...

15 November, 2009

குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள்





பெயர் என்பது ஒரு இனத்தின், மொழியின், பண்பாட்டின் அடையாளமாகும்
. இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு இடப்படும் பெயர்கள் தமிழனின் குழந்தை என்பதற்கான எந்த அடையாளமும் இன்றியே உள்ளன. இன்றைய குழந்தைகள் பெயரால்

டமிலனின் குழந்தைகளாக, மணிப்பிரவாளக் குழந்தைகளாக உள்ளன.



தமிழில் இல்லாத பெயர்களா..?

சங்க இலக்கியத்தைப் பாடிய புலவர்களின் 473 பேர் ஆவர்.

இவர்களின் பெயர் அகர வரிசையில் பெற இங்கு அழுத்தவும்.


குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் -1



குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் -2



தமிழகம்

தமிழ்மக்கட்பெயர்


களஞ்சியம்


குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது என்பது தமிழ் மரபின், பண்பாட்டின் நீட்சி.......

Read more...

14 November, 2009

கூகைக்கோழியார்




இலக்கை இயம்புவதே இலக்கியம். தமிழ் இலக்கியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையுமே இலக்காக இயம்பியுள்ளன.

அறவழியே பொருளைத் தேடி அதை இன்பத்துக்குச் செலவழித்தால் வீடுபேறு கிடைக்கும் என்பது தமிழ் இலக்கியங்களின் அடிப்படையாக உள்ளது.

அறவழியே தேடுவதே பொருள்
அந்தப் பொருளை இன்பத்திற்கே செலவழிக்க வேண்டும்.
அப்போது வீடுபேறு தானே கிடைக்கும்.

இன்பம், வீடுபேறு (சொர்க்கம்)

சிற்றின்பம், பேரின்பம் என இன்பம் இருவகைப்படும்.
நமக்குத் தோன்றும் சுயநல ஆசைகள் யாவும் சிற்றின்பங்களே.
வீடு பேறு அடைய எண்ணுவதே பேரின்பம்.

சொர்க்கமும் நரகமும் எங்கோ உள்ளது என்று நாம் எண்ணுவதால் தான் திரும்பிய திசையெல்லாம் கோயில்களும்,
பாவத்தின் புதையல்களாக உண்டியல்களும் காட்சிளிக்கின்றன.


நாம் வாழ்க்கையிலேயே சொர்க்கமும், நரகமும் உள்ளது என்பதை நாம் உணர்தால் நாம் ஒவ்வொருவரும் கடவுள்களே, நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் சொர்க்கமே…

சொர்க்கம் என்பது மக்களை நல்வழிப்படுத்தும் ஒரு குறியீடு.
நரகம் என்பது மக்களை அச்சுறுத்தி நல்வழிப்படுத்தும் முயற்சி.


இன்பம் என்பது யாது?

கொடுத்து மகிழ்தலே இன்பம்.
அடுத்தவருக்குக் கொடுத்து அவரின் முகமலர்ச்சி காண்தலே இன்பம்.
இறந்த பின்பு சொர்க்கம் சென்று அங்கு கொடுத்து மகிழமுடியாது என்று அறிவுறுத்துகிறது இப்பாடல்,


'வாடா மாலை பாடினி அணியப்,
பாணன் சென்னிக் கேணி பூவா
எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க,
மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்,
காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை
நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப
உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈந்தும்,
மகிழ்கம் வம்மோ, மறப்போ ரோயே!
அரிய வாகலும் உரிய பெரும!
நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர்
முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்
கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே
364. மகிழகம் வம்மோ!
பாடியவர்: கூகைக் கோரியார்
திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி
(புறநானூறு)

பாடலின் பொருள்

வாடாத பொன்மாலையை பாடினி அணியவும்,
நீர்நிலையில் பூக்காத எரிபோலும் பொற்றாமைரை மலரை பாணன் பெற்று மகிழவும்,
கரிய ஆட்டுக்கிடாயை வீழ்த்தி அதன் ஊனை தீயிலிட்டுச்சுட்டு, அந்த சுவையான ஊன் உணவை கள்ளோடு இரவலர்க்கு இட்டு அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு மகிழ்வோம் அதுவே இன்பம் வா..
என்று அரசனைப் புலவர் அழைப்பதாக இப்பாடல் அமைகிறது.

(அரசன் பாடினிக்குப் பொன்மாலையும், பாணனுக்கு பொற்றாமரையும் பரிசில் தந்து கள்ளும் ஊன் உணவும் கொடுதது மகிழ்விப்பது மரபாகும்)
(ஈத்துவக்கும்) கொடுத்து மகிழும் இன்பத்தின் இன்றியமையாமையை,


மறப்போரைச் செய்பவனே, முதிய மரத்தின் பொந்துகளிலிருந்து கேட்போர் அஞ்சத்தக்க குரலில் கூகை என்னும் பேராந்தை கூவ,
பிணங்களை இட்டுவைக்கும் ஈமத்தாழிகள் நிறைந்த சுடுகாடு சென்றபின்னர் கொடுத்து மகிழும் இவ்வின்பம் கிடைக்குமா..?
அதனால் உயிரோடு இருக்கும் இல்வாழ்க்கையிலேயே கொடுத்து அடுத்தவர் மகிழ்வதைப் பார்த்து இன்பம் காண் என்கிறார் புலவர்.

வாழ்க்கை நிலையில்லாதது!
கொடுத்து மகிழ்வதே இன்பமானது!
இந்த வாய்ப்பு இறந்தபின்பு கிடைக்காது!


என்ற கருத்தை எடுத்தியம்பிய இப் புலவரின் பெயர் கிடைக்கவில்லை.அதனால் இப்பாடலில் சிறந்த தொடராக அமைந்த கூகைக் கோழி என்பதே இவருக்கு கூகைக்கோழியார் என்று பெயர் தோன்ற காரணமானது…

Read more...

12 November, 2009

கொல்லிப்பாவை.



 
பாவை என்ற சொல்லுக்கு பொம்மை என்று பொருள் உண்டு. கொல்லிப்பாவை பற்றிய பல செய்திகளையும் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. அவற்றை எடுத்தியம்புதாக இவ்விடுகை அமைகிறது.
 
கொல்லிமலை வல்வில் ஒரி என்னும் வள்ளலுக்கு உரியது. காரி என்பவன் ஓரியை வென்று அம்மலையைச் சேரனுக்கு ஈந்தான். இம்மலையின் மேற்குப்பகுதியில் சூரியஒளிபடுமாறு மேற்கு நோக்கியவாறு தெய்வத்தால் அமைக்கப்பட்ட பாவை ஒன்று இருந்ததாக நூல்கள் உரைக்கின்றன. இப்பாவை கொல்லிப்பாவை எனப்பட்டது. இது கண்டோரை மயக்கி வீழ்த்தி உயிர்விடச் செய்யும் ஆற்றல் கொண்டதாகக் கூறப்பட்டது. அழியாத அழகுடைய தலைவிக்குக் கொல்லிப்பாவையை உவமையாகப் பல பாடல்கள் குறிப்பிடுகின்றன.
 

சான்று-1
 
களவுக்காலத்தில் தாம் வரும் பாதையின் துன்பம் எண்ணி அஞ்சிய தலைவியிடம் தலைவன்,
 
“பயன்மிக்க பலா மரங்களைக் கொண்ட கொல்லிமலையின் மேற்குப் பகுதி சார்ந்த மலையிடத்தே முன்பு தெய்வத்தாலே வடிவமைத்து வைக்கப்பட்ட புதிய வகையில் இயங்குகின்ற பாவையானது, விரிந்து பரவும் சூரியனது வெயிலிலே தோன்றி நின்றது போன்ற உன் அழகிய நலம் கருதி வருவேன்.
அவ்வாறு வரும்போது உன் உடம்பிலிருந்து பரவும் ஒளியே எங்கும் பரவி இருளைப் போக்கும் நீ அஞ்ச வேண்டாம் என்கிறான்.இதனை,
 
'பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப்
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின்
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே.
 
(நற்றிணை-192-8-12.)
 

என்ற பாடலடிகள் விளக்கும்.
 
சான்று-2

கொல்லி மலையிலே கலை வல்லான் ஒருவனால் இயற்றப்பட்ட ஒப்பில்லாத பாவையோ?
படைத்தல் தொழில்வல்ல அயனால் நல்ல மகளிருடைய உறுப்புகள் எல்லாம் ஒரு சேரக்கொண்டு படைக்கப்பட்டவளோ?
அன்றி ஆடவரின் மேலுள்ள வெறுப்பாள் தன்னைக் கூற்றம் என்று பிறர் அறியாதபடி மறைத்து பெண் வடிவு கொண்டு வந்த கூற்றமோ..?
 
என்று தலைவியின் அழகு நலத்தை வியக்கிறான் தலைவன். இதனை,
 
“ஈங்கே வருவாள் இவள் யார் கொல்? ஆங்கே, ஓர்
வல்லவன் தைஇய பாவைகொல்? நல்லார்
உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள்கொல்? வெறுப்பினால்,
வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்கொல்?“
 
(கலித்தொகை-56-6-9)
 
அடிகளின் வழி அறியலாம்.
சான்று-3

பாங்கர் கூட்டத்தில், தலைவி பெறுதற்கரிய காவலையுடையவள். அவளை எண்ணி நீ வருந்துவதில் எந்தப் பயனுமில்லை என்று தலைவனை நோக்கிப் பாங்கன் உரைத்தான். அதற்குத் தலைவன்,
 
“ எக்காலத்தும் அழியாத கொல்லிப்பாவை போல என்னுள்ளத்தே தங்கினாள் தலைவி, அவளை எவ்வாறு மறத்தல் கூடும்? என்று கேட்கிறான் தலைவன்.
இதனை,
 
5 செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு,
அவ் வௌ் அருவிக் குட வரையகத்து,
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும்,
10 பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின்
மாயா இயற்கைப் பாவையின்,
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.


பரணர்
 
(நற்றிணை-201-5-12)
 
என்னும் அடிகள் உரைக்கும்.
மேலும் 
 
“பாவை அன்ன வனப்பினள் இவள்“ (நற்றிணை-301-6)
“நல்லியற் பாவை அன்ன“ (குறுந்தொகை-89-6)
“வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந் தனளே“ (குறுந்தொகை-100-5-6)
“ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்,
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்“ (புறநானூறு-251-1-2)
 
என்னும் அடிகள் வாயிலாகவும் தலைவியின் அழகு நலம் கொல்லிப்பாவையேடு ஒப்பிட்டமை உணரலாம்.
 
இன்றைய நிலையில்..


கொல்லிப்பாவை காவல் தெய்வம் என்றும், கொல்லிமலையில் வாழும் மக்களுக்கு நன்மை செய்வதற்காக சித்தர்களால் உருவாக்கப்பட்டது என்றும் நம்பிக்கை உள்ளது.

மனிதர்களைக் கொல்லும் பாவையின் திருவுருவங்கள் அங்கு பல இடங்களில் இருந்ததாலும்; மனிதர்களையும் பிற உயிரினங் களையும் இழுத்துக் கொள்ளும் மரங்கள் அந்தப் பகுதியில் இருந்ததாலும் அந்த மலைக்கு "கொல்லிமலை' என்று பெயர் வந்ததாக அந்த ஊருக்கான பெயர்க்காரணம் உரைக்கப்படுகிறது.


சங்கத் தமிழரிடமிருந்த நம்பிக்கை இன்று வரை தொடர்ந்து வருவது வியப்பிற்குரிதாகவே உள்ளது. இந்நிலையில் இதிலுள்ள உண்மையை நோக்கும் போது மக்களின் நம்பிக்கை மட்டுமே மிஞ்சுகிறது. கொல்லிப்பாவையால் யாரும் கொல்லப்பட்டதற்கான குறிப்புகளை எங்கும் இல்லை..

ஏதோ ஒரு ஓவியமோ, சிற்பமோ மிகவும் நன்றாக இருந்தால் அதனை நாம் உயிரோட்டத்துடன் உள்ளது என்று கூறுவதுண்டு. உயிர் அந்தப் படைப்பில் இருப்பதில்லை.
நம் அழகுணர்வு மட்டுமே அங்கு உள்ளது.

அது போல சங்ககாலத்தில் கொல்லிமலையில் உருவாக்கபட்ட பாவை என்னும் பொம்மையோ, சிற்பமோ மிகவும் அழகாக இருந்திருத்தல் கூடும். அந்த அழகு மீண்டும் மீண்டும் எண்ணத்தக்கதாக இருந்திருக்கும்.அதனால் பல கற்பனைக் கதைகளும் வழிவழியாக வழக்கில் வந்து இன்றைய சூழலில் ஒரு தெய்வமாக வழக்கில் உள்ளது.

Read more...
Blog Widget by LinkWithin

Followers

About This Blog

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP